top of page
  • Kirupakaran

புத்தாண்டும் வாக்குறுதியும்


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! இந்த நேரத்தில், நீங்கள் தேவாலயத்திற்குச் சென்று 2022 ஆம் ஆண்டிற்கான பல வாக்குறுதிகளைப் படித்து / ஒரு இயல்பு வாழ்க்கைக்கு வந்து இருப்பீர்கள். 2022 ஆம் ஆண்டிற்கான பல பிரசங்கங்களைக் கேட்டிருப்போம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பல வாக்குறுதிகளைப் படித்திருப்போம், இதில் உங்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான வாக்குத்தத்தம் எது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்? எதுவாக இருந்தாலும் தியானம் செய்து தேவனிடம் வாக்குறுதியைப் பெறுங்கள்.


2022 ஆம் ஆண்டிற்கான வாக்குறுதியைக் குறித்து தேவன் என்னிடம் பேசினார். இந்தப் பதிவில் இந்த ஆண்டிற்கான அவரது வழிகாட்டுதல் என்ன என்பதையும், இந்த வாக்குறுதியைத் திறப்பதற்கான திறவுகோல்கள் என்ன என்பதையும் நான் எழுதியுள்ளேன்.


இந்த 2022 புத்தாண்டுக்கான வாக்குத்தத்த வசனம் எரேமியா 29 இல் இருந்து வருகிறது.


நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. – எரேமியா 29:11


2022 ஆண்டிற்கான தேவனின் வாக்குறுதியின் 3 பகுதிகள்


1. செழிப்பின் திட்டம்: மனிதர்களாகிய நமக்கு நம் வாழ்வில் பல ஆசைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. பலவற்றை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம், சிலவற்றை நம் உள்ளத்தில் ரகசியமாக வைத்துள்ளோம். ஆசைகள் ஒரு திட்டத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. திட்டம் ஆசீர்வாதமாக மாறுவதற்கு ஒரு செயலாக மாறுகின்றது. நம் மனித ஆசைகளை தேவன் அறிவார். நம் இருதயத்தில் நாம் நினைக்கும் ஆசைகள் கூட செழிப்புத் திட்டமாக மாறும் என்பதன் பொருள் தான், "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".


எனவே, நாம் செழிக்க வேண்டும் என்றால், இயேசுவின் திட்டம் என்ன என்பதை அறிந்து நாம் பின்பற்ற வேண்டும். தேவன் இந்த உலகில் நமக்கு முழு சுதந்திரம் கொடுத்ததின் நிமித்தம் பல சமயங்களில் நமது சுய மாம்சத்தின் ஆசைகள் இயேசுவின் திட்டத்திற்கு எதிர்மறையாக சென்று நாம் தோல்வியடைகிறோம். நாம் இயேசுவோடு நடக்கும்போது, நமது திட்டங்கள் அவருடையஆவியின் மூலம் தேவனுடைய திட்டத்தால் வழிநடத்தப்படும். மேலும், தேவனின் ஆவி நம் மனித ஆசைகளை ஆராய்ந்து, தேவனின் பார்வையில் இருந்து சரியானவற்றைப் பகுத்தறிந்து, தேவனின் திட்டம் அல்லாதவற்றை அகற்றும். பவுல் இதைப் பற்றி ரோமரில் விவரிக்கிறார், அதனை தாவீதும் சங்கீதத்தில் நன்றாக விளக்குகிறார்.

அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். ரோமர் 8:5


4. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

5. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.சங்கீதம் 37:4-5



2. பாதுகாப்பின் திட்டம்: நாம் பல நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். ஒரு பக்கம் வைரஸால் சவாலுக்கு ஆளாகிறோம் - கொரோனா அலைகளைக் காண்கிறோம் (இப்போது 3 ஆம் அலையில் இருக்கிறோம், கோவிட் இலிருந்து OMINCRON க்கு மாறிவிட்டோம்), மறுபக்கம் - திடீர் மழையின் தாக்கம் / கடுமையான வெப்பம், உலகெங்கிலும் உள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை. இந்த ஆண்டு தேவன் நமக்கு அளிக்கும் வாக்குறுதி "அவைகள் தீமைக்கல்ல", அதாவது அவர் நம்மை தீமையில் இருந்து காத்துக் கொள்வார்.


எனவே, தேவனுடைய பாதுகாப்பைப் பெற வேண்டுமானால், நாம் அவருடைய பார்வையில் நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமான்கள் மீது ஒரு பாதுகாப்பு வழங்குவார். மேலும் அவரது பிள்ளைகளின் அருகில் எந்த தீங்கும் வர முடியாது. யோபுவுடன் ஆண்டவர் இதைச் செய்வதைப் பற்றிய இந்த அனுபவத்தைப் படிக்கிறோம்.


9. அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? 10. நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

யோபு 1:9-10


ஆகவே, யோபு எப்படி இருந்தாரோ, அப்படியே ஆண்டவருடைய பார்வையில் நாமும் நீதிமான்களாக இருந்தால், தேவன் நமக்கு வாக்களிக்கும் பாதுகாப்பை வழங்குவதில் உண்மை உள்ளவராய் இருக்கிறார்.


3. நம்பிக்கையும், எதிர்காலமும்: தேவன் கூறும் வாக்குறுதி “சமாதானத்துக்கேதுவான நினைவுகளே”. இந்த நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது ஒரு எதிர்பார்ப்புடன் நாம் நினைப்பது நடக்க வேண்டும் என்று எண்ணுவது. ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் இந்த நம்பிக்கை விசுவாசத்தைக் குறிக்கிறது. இதை எபிரேயர் நன்றாக வரையறுத்துக் காட்டுகிறது.


விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11:1


தேவனிடம் இருந்து வரும் வாக்குறுதி என்னவென்றால், தேவன் அவரை சார்ந்து இருக்கும்படியான விசுவாசத்தை நமக்கு தருவார், அந்த ஆவிக்குரிய நம்பிக்கையில் அவர் நம் எதிர்காலத்தை வடிவமைப்பார். நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் கணிக்க முடியாது, ஆனால் அவர் நமக்கு ஒரு சிறந்த, நல்ல எதிர்காலத்தை தருவார் என்று அவர் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் நம் எதிர்காலத்தை வடிவமைப்பார் என்று தேவன் நமக்கு வாக்குறுதி அளிக்கிறார்.


வாக்குறுதிக்கான திறவுகோல்கள்


2022 ஆம் வருடத்திற்கான உங்களுடைய வாக்குத்தத்தம் எதுவாக இருந்தாலும், அதைத் திறப்பதற்கான திறவுகோல்கள் உள்ளன. தேவன் முழுவரைபடத்தையும் நமக்கு கொடுக்கமாட்டார். அனுதினமும் அவருடன் நடக்கும்போது சிறிய படிகளில் நடத்தி அவர் கொடுக்கும் வாக்குறுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு வடிவமைப்பார். நாம் இயேசுவோடு எவ்வளவு நெருக்கமாக நடக்கிறோம் என்பதை பொறுத்து தான் இந்த வாக்குறுதியை நாம் சுதந்தரித்துக் கொள்ள முடியும். எரேமியா இந்த வாக்குறுதியின் திறவுகோல்களை வசனங்கள் 12-14 மூலம் கோடிட்டுக் காட்டுகிறார்.

12. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எரேமியா29:12


1. என்னை அழைக்கவும்: நமக்கு முதல் திறவுகோல் ஜெபம் - அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்” ஒவ்வொரு நாளும் இயேசுவிடம் "கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்”. இது நமக்கு ஒரு தெளிவான செய்தி. நமக்கு பிரச்சனை ஏற்படும் போது மட்டும் ஜெபம் செய்யக் கூடாது. நமக்கு பிரச்சனைகள் இருக்கும்போது வழிகாட்டுதலுக்காக ஹாட்லைன் அல்லது ஹெல்ப் டெஸ்க் பயன்படுத்துவது போல தேவனை நடத்த முடியாது.


நாம் தினமும் ஜெபித்தால் மட்டுமே தேவன் தமது வாக்குறுதிக்கு உண்மையாக இருப்பார். உங்களுக்கு கஷ்டமான நாளோ அல்லது மகிழ்ச்சியான நாளோ என்னை அழையுங்கள் என்று தேவன் கூறுகிறார், அவர் ஒவ்வொரு நாளும் நம்முடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார், நம் வாழ்வின் உள் விஷயங்கள் என்ன என்பதை அறிய விரும்புகிறார், நம்மிடம் மிக நெருக்கமாக இருக்க தேவன் விரும்புகிறார்.


அவர் நம்முடைய ஜெபங்களுக்கு செவிசாய்க்கும் ஒரு தேவன், நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ/ அவரை ஜெபத்தில் தேடுகிறோமோ, அந்தளவு அவர் அவருடைய திட்டங்களுக்கு ஏற்ப நம்மை சரியான பாதையில் வழிநடத்துவார்.


7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 8. ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7-8



2. முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுதல்: வாக்குறுதியைத் திறப்பதற்கான இரண்டாவது திறவுகோல், நம் முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுவதாகும்.


13. உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். எரேமியா 29:13


நீங்கள் இதுவரை சென்றிராத புதிய இடத்திற்குச் செல்ல விரும்பினால், அந்த இடத்திற்கு எப்படிச் செல்வீர்கள்? அந்த இடத்தைத் தெரிந்த ஒருவரிடம் கேட்டு / தேடுவதன் மூலம் / உதவி கேட்பதன் மூலம் நீங்கள் அந்த இடத்திற்குச் செல்ல முற்படுவீர்கள்.


அதுபோலவே தேவனைத் தேடுவது என்பது அவருடைய வார்த்தையான “பைபிளை” படிப்பதாகும். தேவன் உங்களிடம் தினமும் என்ன பேசுகிறார் என்பதை அறிய நீங்கள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். உங்களை வளமாக்க/ பாதுகாக்க மற்றும் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க அவர் உங்களுக்கு ஒரு திட்டத்தை உறுதியளித்துள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று நாம் செய்ய வேண்டியதைக் காட்டி வழிநடத்தவும், வடிவமைக்கவும் பைபிளில் திறவுகோல்கள் உள்ளன. அது நாளை நமக்கு விதையாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், நீங்கள் ஜெபித்து, அவருடைய வார்த்தையைப் படிக்கும்போது, ​​வேலை மாறுவதற்கான நேரம், எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது, எதை விடுவது என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிப்பார். ஒவ்வொரு அடியிலும் அவர் உங்களை வழிநடத்துவார். நீங்கள் வார்த்தையைப் படிக்காத வரை, அவர் உங்களிடம் என்ன பேசுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது.


பைபிளைப் படிப்பது புத்தாண்டு தீர்மானமாக இருக்க முடியாது. நீங்கள் காலை பல் துலக்குவது போன்று, வேதம் வாசிப்பது தினசரி செயலாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பலர் வேதத்தைப் படிப்பதை ஒரு புத்தாண்டு தீர்மானமாக ஆக்குகிறோம். மேலும் பைபிளைப் படிப்பது எப்படி தவறிவிட்டது என்பதற்கு நொண்டிச் சாக்குகளைக் கூறி தோல்வியடைகிறோம். நாம் பைபிளைப் படிப்பதை சாத்தான் விரும்புவதில்லை. எனவே அவன் உங்களைத் தோல்வியடையச் செய்ய அன்றாட வாழ்க்கையில் கவனச்சிதறல்களைத் தருவான். தேவனுடைய வார்த்தையைப் படிக்க விருப்பம் மற்றும் விடாமுயற்சியுடன் இருங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க தேவனின் உதவியை நாடுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் வேலையில் பரபரப்பாக இருந்தால், 30 அல்லது 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுந்து வேதத்தை வாசித்து தியானம் செய்து ஜெபம் செய்யுங்கள். ஆண்டவர் இந்த செயல்களை மிகவும் கனம் பண்ணுவார்.


அதேபோல, படிக்க வேண்டும் என்பதற்காக பைபிளைப் படிக்காதீர்கள், வேலைக்குச் செல்லும் வழியில் 1 வசனத்தை மட்டும் படித்துவிட்டு வேதத்தை வாசித்து விட்டேன் என்று கூறாதீர்கள். பலர் what's app Forward படித்து விட்டு வேதத்தை வாசித்து விட்டோம் என்றும் கூறுகிறார்கள். தேவனைத் தேடுவது என்பது அவருக்கு நேரத்தை ஒதுக்குவது, முதலில் அவரைக் கனம் பண்ணுவது, காலையில் அவரைத் தேடுவது ஆகும். அமைதியான இடத்திற்குச் சென்று, பைபிளை மெதுவாகப் படித்து, அதைப் பற்றி தியானியுங்கள். அவர் உங்களிடம் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்று கேளுங்கள். இந்த வார்த்தை உங்களுக்கு என்ன சொல்கிறது அல்லது நீங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு என்ன விளக்கத்தைக் கொடுக்கிறது? என்று கேளுங்கள். தேவனுடைய ஆவி உங்களை வழிநடத்தி உங்களுடன் பேசும்.


12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரெயர் 4:12


தேவன் எப்பொழுதும் அவருடைய வாக்குறுதியில் உண்மையாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவருடைய வாக்குறுதியின் திறவுகோல்களை நாம் நம்முடைய சுய செயல்கள் மூலம் இழந்துவிடுகிறோம், பின்னர் அவருடைய வாக்குறுதியில் அவர் நமக்கு உண்மையாக இருக்கவில்லை என்று அவரைக் குற்றம் சாட்டுகிறோம். அவர் தாம் கொடுத்த வாக்குறுதியை 1000 தலைமுறைகளுக்குக் காப்பாற்றுகிறார் என்று தேவனின் வார்த்தை கூறுகிறது. அநேக நேரம் நாம் உலகில் மிகவும் பிஸியாக இருப்பதால், அவருடைய வாக்குறுதிக்கான திறவுகோல்களை மறந்துவிடுகிறோம். நமக்கு எல்லாம் உடனடியாகத் தேவை, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம். ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற நமக்குப் பொறுமை இல்லை.


ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், I நாளாகமம் 16:15



அவர் ஒரு உண்மையுள்ள தேவன். இந்த 2022 ஆம் ஆண்டு அவருடைய வாக்குறுதிகளின்படி வழிநடத்த அவர் மீது நம்பிக்கை வையுங்கள். வாக்குறுதியைப் பெறுவதற்கு நாம் செய்ய வேண்டிய செயல்கள் எளிமையானவை " ஆண்டவரைத் தேடி / ஜெபிப்பதன் மூலம் தினமும் இயேசுவோடு நடங்கள்".



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page