top of page

குறிக்கோளும் இலக்குகளும்

  • Kirupakaran
  • Feb 16
  • 6 min read

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தங்கள் குழுக்களுக்கு குறிக்கோள்களையும் இலக்குகளையும் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் வருடாந்திர குறிக்கோள்கள் உள்ளன. நீங்கள் ஒரு விற்பனைக் குழுவைக் கேட்டால், தினமும் அவர்களை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் கடினமான இலக்குகளைப் பற்றி கூறுவார்கள். வழக்கமான வாராந்திர, மாதாந்திர மற்றும் காலாண்டு மதிப்புரைகள் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், பாதையை சரிசெய்வதற்கும், இந்த இலக்குகளை அடைவதற்கான உத்திகளைச் செம்மைப்படுத்துவதற்கும் உதவுகின்றன.


இதேபோல், தனிநபர்கள் தனிப்பட்ட இலக்குகளை அமைத்துக் கொள்கிறார்கள், அது  வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் மாறுபடும். ஒரு மாணவர் ஒரு பொறியியலாளராகவோ அல்லது மருத்துவராகவோ அல்லது மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும் என்றோ லட்சியம் வைத்திருக்கலாம். ஒரு குடும்பத் தலைவர் வீடு வாங்க ஆசைப்படலாம். சிறியது முதல் பெரியது வரை என்று இலக்குகள் வாழ்க்கையில் எல்லாருக்கும் உள்ளன.


இருப்பினும், ஆவிக்குரிய இலக்குகள் என்று வரும்போது, பலர் - குறிப்பாக தேவாலயத்திற்கு தவறாமல் வருபவர்கள் - அவற்றை வரையறுக்கவோ அல்லது அவற்றின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளவோ ​​போராடுகிறார்கள். வாழ்க்கையின் பரபரப்பில் பெரும்பாலும், ஆவிக்குரிய விருப்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தொழில், செல்வம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு நாம் தெளிவான இலக்குகளை நிர்ணயிக்கிறோம். ஆனால், நமது ஆவிக்குரிய முன்னேற்றத்தை புறக்கணிக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்குப் பிறகு, உலக காரியங்களில் மூழ்கி, கண்ணுக்குத் தெரியாத ஆவிக்குரிய பயணத்தைப் புறக்கணித்து, பொருளாதார வெற்றிக்காக பாடுபடும்போது, தேவனைத் தேடுவது பின்னடைகிறது. இயேசு நமக்கு உதவ தயாராக இருக்கிறார், ஆனால் அவருடைய அழைப்பையும் நம் வாழ்வின் நோக்கத்தையும் மறந்துவிட்டு, பெரும்பாலும், அவருடைய ஆசீர்வாதங்களை நமது தனிப்பட்ட ஆதாயத்திற்காக மட்டுமே தேடுகிறோம்.

 

பவுலின் வாழ்க்கை: ஆவிக்குரிய இலக்குகளுக்கான முன்மாதிரி

எது உண்மையில் முக்கியமானது என்பது பற்றிய ஒரு முக்கியமான பாடத்தை  பவுலின் வாழ்க்கை நமக்கு கற்பிக்கிறது. அவர் ஒரு காலத்தில் தனது அந்தஸ்து, கல்வி மற்றும் மத சாதனைகளை மிக முக்கியமான விஷயங்களாக நினைத்திருந்தார். ஆனால், இயேசு கிறிஸ்துவை அறிந்த பிறகு, கிறிஸ்துவுடனான தனது உறவுடன் ஒப்பிடும்போது இவை எதுவும் மதிப்புக்குரியவை அல்ல என்பதை  உணர்ந்து கொண்டார்.

ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக்

கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். பிலிப்பியர் 3:7

 

கிறிஸ்துவை அறிவதற்கு முன்பு பவுலின் சாதனைகள்

இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பு, பவுல் கீழ்க்கண்டவற்றில் மிகவும் பெருமை கொண்டிருந்தார்:

  • அவரது மதப் பின்னணி - யூத சட்டங்கள் அனைத்தையும் பின்பற்றிய ஒரு பரிசேயர்.

  • அவரது அந்தஸ்து - மரியாதைக்குரிய பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

  • அவரது அறிவு - நியாயசாஸ்திரங்களில் சிறந்து விளங்கிய யூத போதகரான கமாலியேலிடம் பயின்றவர்.

  • அவரது வைராக்கியம் - தனது நம்பிக்கைகளில் பெரும் ஆர்வத்துடன்  இருந்ததால் கிறிஸ்தவர்களைக் கூட துன்புறுத்தினார்.  

 

இவை அனைத்தையும் 4 முதல் 6 வரையிலான வசனங்களில் பட்டியலிடுகிறார். மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். பிலிப்பியர் 3:4-6

 

கிறிஸ்துவை அறிந்த பிறகு பவுலின் மறுமொழி

அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். பிலிப்பியர் 3:7b.

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:8

  • ஈர்க்கக்கூடிய சான்றுகள், அந்தஸ்து மற்றும் அறிவுத்திறன் இருந்தபோதிலும், கிறிஸ்துவுடன் ஒப்பிடும்போது அவை அனைத்தும் பயனற்றவை என்று தைரியமாக அறிவிக்கிறார்.

  • இயேசுவை அறிவது எல்லாவற்றையும் விட மிகவும் மதிப்புமிக்கது என்பதை பவுல் புரிந்துகொண்டார்.

  • "நஷ்டம்" என்ற வார்த்தையை 7 மற்றும் 8, இரண்டு வசனங்களிலும் கூறுகிறார், இதன் மூலம் இந்த நம்பிக்கை அவரது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகிறது என்பதை வலியுறுத்துகிறார்.

  • கிறிஸ்துவுடனான அவரது உறவுடன் ஒப்பிடுகையில், தனது கடந்த கால சாதனைகள் அனைத்தையும் "குப்பை" என்று அழைக்கிறார்.

 

நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி

நம்முடைய அறிவு, அந்தஸ்து, பணம், வெற்றி என நமக்குச் சொந்தமான அனைத்தும், இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்வதோடு ஒப்பிடுகையில் பயனற்றவை என்று பவுலைப் போல நாமும் துணிச்சலுடன் கூற முடியுமா?

 

உலக சாதனைகள் ஏன் நஷ்டம்?

  • ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல், அனைத்து உலக வெற்றிகளும் அர்த்தமற்றவை. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மாற்கு 8:36

  • நாம் உலகத்தில் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு இயேசுவை இழந்துவிட்டால், உண்மையிலேயே முக்கியமானதை (நமது ஆத்துமாவை) இழந்துவிட்டோம். நித்திய ராஜ்யத்தில் நமக்கு இடமில்லை.

  • "நான் ஆவிக்குரியவனாக இருக்கிறேன், சபைக்கு செல்கிறேன், தினமும் ஜெபிக்கிறேன்" என்று நாம் கூறலாம். ஆனால் அது மட்டும் போதுமா?

    • நம் வாழ்க்கை முறையின் மூலம் பிறர் கிறிஸ்துவிடம் வர  உதவுகிறோமா?

    • தேவன் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துகிறோமா? அல்லது நமக்கு மட்டும் பயன்படுத்துகிறோமா?

    • நமது பொருளாதார ஆசீர்வாதங்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது அவை நம் சொந்த வசதிக்காக மட்டும்தானா?

    • தேவையில் இருப்பவர்களுக்காக எத்தனை பரிந்துரை ஜெபங்களை நாம் செய்திருக்கிறோம்?

    • நம் தேசத்திற்காக அல்லது துன்பப்படும் ஒருவருக்காக உபவாசித்து  ஜெபிக்க நேரம் ஒதுக்குகிறோமா?

    • மிக முக்கியமாக, மற்றவர்கள் அவரை விசுவாசிக்கும்படி,   இயேசுவைப் பற்றிய வார்த்தையையும், நம்முடைய வாழ்க்கைச் சாட்சியையும் பகிர்ந்துகொள்கிறோமா?

    • எத்தனை பேரை நாம் ஞானஸ்நானத்திற்கும், அவரது சீடர்களாகவும்  வழிநடத்தியிருக்கிறோம்?

    • அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நாம் செய்யும் செயல்களே அவருக்கு முக்கியமானவை.

 

பவுலின் இலக்குகள் - கிறிஸ்துவை அறிந்த பிறகு

பிலிப்பியில் உள்ள திருச்சபையில் பல வருடங்கள் ஊழியம் செய்த பிறகு, ரோமாபுரியில் சிறையில் இருந்தபடியே பவுல் இந்த நிருபத்தை எழுதினார்.

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன்,பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:10-14

 

வாழ்க்கையில் பவுலின் இலக்குகள்

வேதத்தின் 13 புத்தகங்களை எழுதிய பவுல், தனது ஆவிக்குரிய இலக்குகளை தெளிவாக வகுத்தார்:

  • நான் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறேன் – நான் அவரையும்

  • அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்க விரும்புகிறேன் - இந்த வல்லமை பாவிகளை இரட்சிக்கிறது. மேலும், நாம் பாவத்திலிருந்து  திரும்ப உதவுகிறது - அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்

  • கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு கொள்ள விரும்புகிறேன் – அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும்

  • நான் மரணத்திலும் கூட கிறிஸ்துவைப் போல இருக்க விரும்புகிறேன் - அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி

  • கிறிஸ்துவோடு உயிர்த்தெழுதலையும் நித்திய ஜீவனையும் அனுபவிக்க விரும்புகிறேன் – நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்

  • 13 புத்தகங்களை எழுதிய பிறகு தான் இன்னும் இந்த இலக்கை நெருங்கவில்லை என்று கூறுகிறார், அவரது பணிவைப் பாருங்கள் - சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி

  • இலக்கை நோக்கித் தொடர்வதே அவரது குறிக்கோள் - கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

 

கிறிஸ்துவில் கவனம் செலுத்துவதும், பின்னானவைகளை மறந்து, விசுவாசத்தில் முன்னேறுவதும் பவுலின் பிரதான இலக்காக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவைத் தேடவும், நித்தியத்தை மனதில் கொண்டு வாழவும் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

 

ஆவிக்குரிய இலக்கை அடைவதற்கு எடுக்க வேண்டிய தனிப்பட்ட நடவடிக்கைகள்


1. ஆவிக்குரிய வளர்ச்சிக்கான விருப்பத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

ஆவிக்குரிய இலக்குகளைப் பெற, பின்வருவனவற்றைத் தேடும் இருதயம் உங்களுக்குத் தேவை:

  • கிறிஸ்துவின் மீது அன்பு - இது தேவனின் அன்பைத் தேடுவதிலிருந்தும் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலிருந்தும் வருகிறது.

  • கிறிஸ்துவுக்குள் தேவபக்தி - நீங்கள் மனத்தாழ்மையோடிருந்து, தேவனுடைய வார்த்தை உங்களை உள்ளிருந்து மாற்ற அனுமதிக்கும்போது இது நிகழ்கிறது.

  • கிறிஸ்துவில் பரிசுத்தம் - உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவின் மூலம் மன்னிக்கப்படும்போது மட்டுமே இது சாத்தியமாகும். உலகத்தின் அழுக்குகள் நம்மைக் கறைப்படுத்தும் என்பதால் தினமும் அவரது இரத்தத்தால் கழுவப்பட மனந்திரும்புங்கள்.

  • கிறிஸ்துவின் மூலமாக உண்மையான நீதி - இது தேவனை நம்புவதன் மூலமும், அவருடைய அழைப்பைப் பின்பற்றுவதன் மூலமும், அவருடைய வழியில் வாழ்வதன் மூலமும், விசுவாசத்தில் நடப்பதன் மூலமும் வருகிறது.

  • கிறிஸ்துவைப் போன்று ஒரு ஊழியக்காரரின் இருதயம் - உங்கள் திறமைகளையோ பொருள் ஆசீர்வாதங்களையோ பொருட்படுத்தாமல், தேவனுடைய வேலையில் கவனம் செலுத்தி, மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்போது இது வருகிறது.

2. தேவனின் விருப்பதைக் கேளுங்கள்

  • பெரும்பாலும், நாம் விரும்புவதையே ஜெபிக்கிறோம், ஆனால் எத்தனை முறை அவரிடம், “ஆண்டவரே, என்னிடமிருந்து நீர் என்ன விரும்புகிறீர்?” என்று கேட்கிறோம்.

  • நாம் அவருடைய சித்தத்தை நாடும்போது தேவன் மகிழ்ச்சியடைகிறார். பின்வருபவற்றை அவரிடம் கேளுங்கள் :

    • நான் என்ன ஆவிக்குரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்?

    • நான் உங்களுக்கு எப்படி சிறப்பாக ஊழியம் செய்ய முடியும்?

  • என்ன செய்ய வேண்டும் என்பதை தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களுக்குக் காண்பிப்பார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு பயபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்தால், அவர் சொல்வதை புரிந்துகொள்வீர்கள். அவருடைய வார்த்தையே உங்களை வழிநடத்தும் வெளிச்சம்.

3. தெளிவான ஆவிக்குரிய இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள்

  • ஆவிக்குரிய இலக்குகளுக்கும் உலக இலக்குகளுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில், தனிப்பட்ட வெற்றியை ஆவிக்குரிய வளர்ச்சி என்று தவறாக நினைக்கிறோம்.

  • சிறியதாகத் தொடங்குங்கள் - தேவன் உங்களை மகத்தான வெற்றிகளுக்கு அழைத்துச் செல்வார்.

  • தேவன் நமக்கு நீண்டகால இலக்குகளை ஒரேயடியாகக் கொடுப்பதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அவர் ஒரு தரிசனத்தையும், ஒவ்வொன்றாக சிறிய இலக்குகளையும் வழங்குகிறார். நாம் ஒன்றை நிறைவேற்றியவுடன், அவரது தரிசனத்தை அடைவதற்கான அடுத்த படியை நமக்குக் காட்டுகிறார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர்.

  • ஒருவரை கிறிஸ்துவிடம் வழிநடத்தும்படி சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்வது ஒரு எளிய இலக்காக இருக்கலாம்.

  • தொழிலதிபர்கள் வழிகாட்டுபவர்களை நோக்கிப் பார்ப்பது போல, உங்கள் திருச்சபை / மூப்பர்கள் / போதகர்களிடமிருந்து உண்மையுள்ள வழிகாட்டிகளைக் கண்டுபிடியுங்கள். ஜெபத்தில் தேவனின் ஆலோசனையைத் தேடுங்கள், அவர் ஒரு நல்ல ஆசிரியர். தான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் தன்னைப் போல் விசுவாசிக்கும்படி பவுல் விசுவாசிகளை உற்சாகப்படுத்தினார்.

  • பவுலின் இலக்குகளைப் பாருங்கள் - பிலிப்பியர் 3:10-14

    • கிறிஸ்துவின் பாடுகளில் பங்குகொள்வது

    • மரணத்தில் அவரைப் போல ஆவது

    • அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிப்பது

    • நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவரிடம் கேட்கத் தயங்குகிறோம். ஆனால் கடினமான காரியங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

    • ஆண்டவரே, நான் மரணத்திற்கு எப்படி ஆயத்தப்பட வேண்டும்?

    • உமது மகிமைக்காக நான் எப்படி துன்பங்களைத் தாங்க வேண்டும்?

4. இந்த ஆவிக்குரிய இலக்குகளுக்காகக் கேளுங்கள் / தேடுங்கள்

  • உங்கள் இலக்குகளை தேவனின் சித்தத்துடன் இணைத்துப் பாருங்கள் - உங்கள் ஆசைகள் அவருடைய திட்டத்துடன் பொருந்துகிறதா என்று ஜெபத்தில் கேளுங்கள்.

  • உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் செயல்பட உதவும்படி அவருடைய கிருபைக்காக ஜெபியுங்கள்.

  • உங்கள் இலக்குகளாக உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தங்களைக் கொண்டு தினமும் ஜெபியுங்கள். இது நீங்கள் அவற்றைப் பற்றி தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. நாம் என்ன கேட்கிறோம் என்பதை தேவன் ஏற்கனவே அறிந்திருந்தாலும், நாம் உண்மையிலேயே நம் இலக்குகளில் உறுதியாக இருக்கிறோமா அல்லது ஒரு நாள் அல்லது ஒரு வாரம் மட்டும் ஜெபித்துவிட்டு பின்னர் அவற்றை மறந்துவிடுகிறோமா என்பதை அவர் கவனிக்கிறார்.

5. உங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், பரிசுத்த ஆவியானவரின் மீது நம்பிக்கை வையுங்கள்.

  • ஜெபமே வெற்றிக்கான திறவுகோல்.

  • பவுலைப் போலவே ஆவியில் நடங்கள்.

  • உங்கள் செயல்கள் தேவனுடைய விருப்பத்தோடு ஒத்துப்போகின்றனவா அல்லது உங்கள் சொந்த ஆசைகளோடு ஒத்துப்போகின்றனவா என்பதை தொடர்ந்து சோதித்துப் பாருங்கள்.

  • ஆவிக்குரிய ரீதியில் நாம் சில சமயங்களில் பலவீனமாகவோ சுறுசுறுப்பற்றோ உணரலாம். உங்களுக்கு உதவி செய்யும்படி அவரிடம்  கேளுங்கள் - இப்படி உணருவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. எலியா, தாவீது, தானியேல் ஆகியோர் கூட பலவீனமான தருணங்களை எதிர்கொண்டனர். ஆனால், அவர்களைப் புதுப்பிக்க தேவன் உதவினார். உங்கள் சோர்வான தருணங்களில் நீங்கள் ஜெபித்தால் மட்டுமே இது நிகழும்.

6. உங்கள் முன்னேற்றத்தை தவறாமல் சரிபார்க்கவும்

  • சாத்தான் உங்கள் கவனத்தை உள்முகமாகத் திருப்ப முயற்சிப்பான், உங்களைத் திசைதிருப்பலாம், உலக இலக்குகளைக் கொண்டு ஆவிக்குரிய இலக்குகளை மறக்கச் செய்யலாம். உங்கள் ஆவியின் வரங்களால் உங்களை தன்னலமாக மாற்றலாம் - விழிப்புடன் இருங்கள்!

  • நீங்கள் தேவனுக்கு மகிமை செலுத்துகிறீர்களா அல்லது இந்த சிறிய சாதனைகளில் உங்களுக்குப் புகழைத் தேடுகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.

  • ஒரு நாள் நாம் அவருக்கு முன்பாக நின்று, அவர் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களைக் கொண்டு நாம் என்ன செய்தோம் என்பதற்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (மத்தேயு 25:14-30, தாலந்துகளின் உவமை).

  • ஒவ்வொரு வாரமும், உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தை மதிப்பிடுங்கள்.

  • நீங்கள் வளரவில்லை என்றால், முன்னோக்கிச் செல்வதற்கான பாரத்தையும் வாஞ்சையையும் தருமாறு ஜெபியுங்கள்.

7. தேவனின் அழைப்பு

  • இந்த இலக்குகள் முழுநேர ஊழியர்கள், சபை போதகர்களுக்கு மட்டுமே பொருந்துமா என்று நீங்கள் யோசிக்கலாம், ஆனால் அவை அனைவருக்கும் முக்கியம்.

  • ஆவிக்குரிய இலக்குகள் ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. அவருடைய ராஜ்யத்தில் ஊழியம் செய்ய தேவன் நம்மை அழைக்கிறார், இங்கே நாம் செய்யும் வேலை பரலோகத்தில் அவர் நமக்குக் கொடுக்கும் வேலையை வடிவமைக்க முடியும்.

  • இந்த அழைப்புக்கு பதிலளிக்கும்போது, ​​​​​​உங்கள் கவனத்தை உலகத்திற்கும் உங்கள் விசுவாசத்திற்கும் இடையில் பிரிக்காமல், தேவனின் ராஜ்யத்திற்கு நீங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். இது 100% கிறிஸ்துவுக்கானது.

  • உங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேர ஊழியத்திற்கு தேவன் உங்களை அழைக்கிறார் என்றால், அவரை விசுவாசித்து அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றுங்கள் - யாரையும் சார்ந்திருக்காமல் கிறிஸ்துவை மட்டுமே சார்ந்திருங்கள்.

  • ஆவிக்குரிய இலக்குகளைப் பின்தொடர்வது என்பது உங்கள் வேலையை விட்டுவிடுவது என்று அர்த்தமல்ல. நீங்கள் அவருடைய நோக்கத்தைப் பின்பற்றும்போது தேவன் உங்கள் வேலையில் உங்களைப் பயன்படுத்த முடியும். நீங்கள் அவருக்காக பகுதி நேர ஊழியராக சேவை செய்யலாம். உண்மையான இருதயத்தோடு கேளுங்கள், அவர் உங்களை வழிநடத்துவார்.

 

 

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Mar 10

Excellent message.All glory to our lord Jesus

Like

Philip C
Feb 17
Rated 5 out of 5 stars.

Amen

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page